Wednesday, 29 April 2009

முஸ்லிம்கள் திமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும் - TNTJ

நக்கீரனில் வந்த பேட்டி.

தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னுலாபுதீன் ராமநாதபுரம் வந்திருந்தார். தங்கள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக நம்மிடம் பேசினார்.
“தி.மு.க.விற்கு எங்களுடைய தார்மீக ஆதரவை வழங்குகின்றோம். தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்வோம். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்யமாட்டோம். அவர்கள் மத்தியில் இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வர முயற்சிக்கவில்லை. அதேவேளையில் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்போம். காரணம், புதுகை மாநிலத்தில் முஸ்லிம் இடஒதுக்கீட்டுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது” என்றவரிடம்....

“த.மு.மு.கவின் அரசியல் கட்சியான ம.ம.க.வுக்கு ஆதரவு அளிப்பீர்களா? என்றோம்.

மற்ற சகோதர இயக்கங்களைக் கூட ஓரளவு ஏற்றுக் கொள்வோம். ஆனால் ம.ம.கவை விட மாட்டோம். காரணம், ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களுக்கு நல்ல பெயர் இல்லை. வக்ஃபு வாரிய பதவியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஜமாத்திலும் த.மு.மு.க.வை சேர்ந்த 2 பேரை உறுப்பினராகப் போடுவதற்கு வற்புறுத்தினார்கள். அது மட்டுமில்லாமல் இஸ்லாம் மதத்திற்குள் புகுந்தவிட்ட மூடநம்பிக்கைகள் பற்றி நாங்கள் சீர்திருத்தச் பிரச்சாரம் செய்கிறோம். எங்களுக்கெதிராக வன்முறையில் இறங்குவதே த.மு.மு.க.வினர் தான்.
இவர்களை தி.மு.க. கூட்டணியில் சேர்ந்திருந்தாலும், அவர்களை நாங்கள் எதிர்த்திருப்போம். இவர்கள் தி.மு.கவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, அ.தி.மு.கவிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்கள். ஆனால் இரண்டு கட்சிகளுமே இவர்களை நம்பவில்லை என்பதுதான் உண்மை”.
“கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்தீர்கள். இப்போது தி.மு.க.வை ஆதரிக்கிறீர்களே?”

சொந்த வெறுப்பு, விருப்புகளுக்காக யாரையும் ஆதரிப்பதில்லை. குறைந்தபட்ச சமுதாய நலன் என்ற கோணத்தில்தான் முடிவு எடுக்கின்றோம். கலைஞர் முடிந்தவரையில் இஸ்லாமிய மக்களுக்கு நன்மை செய்திருந்தார்கள். இன்னொரு விஷயம் ஜெ.க்கும் பா.ஜ.க.வுக்கும் இன்னும் தொடர்பு உள்ளது. அதனால்தான் அத்வானி உறுதியாக “தேர்தலுக்குப் பின் ஜெ. எங்களை ஆதரிப்பார்” என்று சொல்கிறார். இதை இப்போது ஜெயலலிதா மறுக்கிறாரே தவிர பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுக்கமாட்டேனென்று உறுதியாகக் கூறவில்லை. அதனால் தான் ஜெ. கட்சி வெற்றி பெறக் கூடாது என்கிறோம்”.

“தவ்ஹீத் ஜமாத் எப்போது அரசியல் கட்சியாகப் போகிறது?”

நாங்கள் நடத்தும் கூட்டங்கள், மாநாடுகளைப் பார்த்து அதில் கலந்து கொள்கிற மக்களைப் பார்த்து எல்லோரும் தொடர்ந்து கேட்கும் கேள்வி இதுதான். எங்களால் எல்லாம் விஷயத்திலும் சமரசம் செய்து கொள்ள முடியாது. அரசியல் கட்சியானால் அனைத்துவிதமான விமர்சனங்களும் வரும். ம.ம.கவைப் பற்றி கேட்கின்ற கேள்விகள் எங்கள் மீதும் விழும். அதனால் சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்து விடுவோம்” என்கிறார் ஜெய்னுலாபுதீன்.

நன்றி : நக்கீரன்

http://tntj.net/Statement/PJ_Statement_inNakkeeran_25-4-2009.asp


0 comments: